ஊட்டி, டிச.3: நீலகிரி மாவட்ட 31வது தமிழ்நாடு என்சிசி அமைப்பின் கமாண்டர் கர்னல் சீனிவாசன் உத்தரவு படி ஊட்டி அருகேயுள்ள நஞ்சநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் என்சிசி தின விழா நேற்று நடந்தது. என்சிசி அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் என்சிசி மாணவர்கள் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று கொரோனா தொற்று பரவல் குறைந்திருந்தாலும், முழுமையாக சீராகவில்லை. எனவே, முக கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்றிட வேண்டும் என வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினர். தொடர்ந்து, பள்ளி வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மரக்கன்று நடவு செய்யப்பட்டது. இதில், பள்ளி தலைமையாசிரியர் அசோக்குமார், சுபேதார் சசிக்குமார், கண்காணிப்பாளர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.